இலவசங்கள் அறிவிக்க தடைகோரிய வழக்கில் திமுகவை தலைமை நீதிபதி சாடியது ஏன்? - முழு விபரம்

இலவசங்கள் அறிவிக்க தடைகோரிய வழக்கில் திமுகவை தலைமை நீதிபதி சாடியது ஏன்? - முழு விபரம்
இலவசங்கள் அறிவிக்க தடைகோரிய வழக்கில் திமுகவை தலைமை நீதிபதி சாடியது ஏன்? - முழு விபரம்

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கக்கோரி, பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாயா தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நடைபெற்றது. திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சனிடம் தலைமை நீதிபதி காட்டமான கேள்விகளை முன்வைத்தார். - இன்று நடந்த வாதத்தின் முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

அப்போது பேசிய தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் பிரச்னை இருக்கிறது, இதை யாரும் மறுக்கமுடியாது. இதுகுறித்து நிச்சயமாக விவாதம் என்பது தேவை. இந்த விவகாரம் அரசின் கொள்கை சார்ந்த விவகாரம்; அதனால் நீதிமன்றம் தலையிட முடியாது என கூற முடியுமா? ஏதாவது சட்டம் இயற்றப்படும்போது அதனை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையா? உதாரணமாக மாநிலங்கள் இலவசங்களை வழங்க முடியாது என மத்திய அரசு ஒருவேளை சட்டம் இயற்றுவதாக வைத்துக் கொள்வோம், அல்லது மாநில அரசுகள் ஒரு சட்டத்தை உருவாக்கிறது என வைத்துக்கொள்வோம். அத்தகைய சட்டம் சரியானதா இல்லையா என்பதை நீதித்துறை ஆய்வுக்கு உரியது அல்ல என உங்களால் சொல்ல முடியுமா? எனவே நாட்டின் நலனுக்காக தான் இந்த பிரச்னையை கேட்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் எனக் கூறினார்.

அப்போது வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த விவகாரத்தில் முதலில் பொருளாதார நிலை தொடர்பாக நாம் விவாதிக்க வேண்டும், ஏனெனில் இலவசங்கள் அறிவிப்பால் கடும் பாதிப்புக்குள்ளாவது பொருளாதாரம் தான் எனக் கூறினார்.

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கும் விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாஜக மற்றும் அனைவரும் இதில் ஒரு பக்கம் தான், எனவே இலவசம் அறிவிப்பு விவகாரத்தில் தற்போதைய மனுவை ஒரு காரணியாக எடுத்து, அனைத்து கோணங்களிலும், அனைத்து விதத்திலும் விவாதிப்போம் எனக் கூறினார்.

அப்போது வாதிட்ட மத்திய அரசு தரப்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இலவசம் அறிவிப்பு விவகாரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் ஒரு கட்சி சேலை, இலவச கலர் டிவி தருவதாகவும், இலவச மின்சாரம் வழங்குவதாகவும் அறிவிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பு வரி செலுத்தும் மக்களின் தலையில் விழுகிறது. எனவேதான் இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக இலவச மின்சார அறிவிப்பு விவகாரத்தால் மின் கழகங்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றன. மேலும், டெல்லி முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யும் அளவிற்கு நிலைமை உள்ளது எனக் கூறினார்.

ஒருவேளை தேர்தலுக்காக இனி நாங்கள் சொத்து வரி வாங்கமாட்டோம் என ஒரு கட்சி கூறமுடியுமா? அது பொருளாதார பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இலவச வாக்குறுதி விவகாரத்தில் தேர்தல் சமயத்தில் அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் பார்த்து கொள்ளும். ஆனால் மொத்தமாக பிற நேரத்திலும் இலவசம் அறிவிப்பு என்பதைத்தான் நாம் முக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இலவசங்கள் வழங்குவது என்பது ஒரு முக்கியமான பிரச்னை இதுகுறித்து நிச்சயமாக விவாதம் என்பது தேவை என மீண்டும் கூறினார்.

மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்படும் இலவசங்களால் மாநிலத்தின் கடன் தொகையே அதிகரிக்கிறது. இது மாநில வளர்ச்சியை பாதிக்கிறது. மேலும் இந்த இலவசங்கள் என்பது ஊழலுக்கு வழி வகுக்கிறது. மேலும் தேர்தல் நேர இலவசம் குறித்து தேர்தல் ஆணையம் கவனித்து கொள்ளும் என தெரிவித்தால், அது தொடர்பாக சில உத்தரவு பிறப்பிக்க வேண்டும், மேலும் தேர்தல் அறிக்கையில் கூறப்படும் இலவசங்கள் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கருத்து இருக்க வேண்டும், மேலும் இந்த இலவச அறிவிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, இங்கு அனைத்து தரப்பினரும் தேர்தல் இலவசம் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக வாதிடுகிறீர்கள். நாங்கள் மொத்தமாக இலவசம் அறிவிப்பு தொடர்பாக கட்டுப்பாடு வேண்டும் என நினைக்கிறோம். மேலும் ஆட்சிக்கு வருவதற்கு முன் மாநிலத்தின் பொருளாதார நிலையை எவ்வாறு ஒரு கட்சி அறிந்திருக்கும்? ஆனால் தேர்தல் இலவசத்தைத் தாண்டி அரசின் கொள்கை முடிவு, திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்கள் அறிவிக்கப்படுகிறது. அதுவும் கவனிக்கப்பட வேண்டியது, சரிபடுத்தப்பட வேண்டியது ஆகும். எனவே இந்த விவகாரத்தை பொறுத்தவரை இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது எனக் கூறினார்.

இந்த இலவசங்கள் விவகாரத்தை கையில் எடுக்கும்போது அதன் மூலம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என நினைத்தோம். மேலும் இலவசங்கள் தொடர்பான விவகாரத்தில் ஒரு ஆணையம் அமைக்கலாம் என நினைத்தோம். ஏனெனில் இலவசங்கள் அறிவிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தால் அதற்கு இந்த ஆணையம் உதவிகரமாக இருக்கும் என பேசிக்கொண்டிருந்த போது திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் குறுகிட முற்பட்டார்.

அப்போது தலைமை நீதிபதி திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சனிடம், இந்த வழக்கில் நீங்கள் ஆதரவாக களமிறங்கும் திமுக கட்சி மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். எனக்கு இது தொடர்பாக பல விஷயங்கள் கூற வேண்டியுள்ளது. மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்டும் அது குறித்து பேசாமல் தவிர்ப்பதால் அவற்றை குறித்து அறியவில்லை என்று நினைக்க வேண்டாம் என காட்டமாக தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து வாதங்களை வைத்த இலவசங்களுக்கு எதிரான தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உச்சநீதிமன்றம் குறித்த தமிழக நிதியமைச்சரின் கருத்து ஏற்புடையது அல்ல எனத் தெரிவித்தார்

இதனையடுத்து தலைமை நீதிபதி, மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமத்துக்கு கால்நடை வழங்குவது அவர்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றவே. அதேபோல கிராம்புற மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவது அவர்கள் கல்வி கற்று பயனடைவே. எனவே இந்த திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசம் என கூறவில்லை. மேலும், இலவசங்கள் மற்றும் நலத்திட்டங்களையும் அதன் வேறுபாட்டையும் நாங்களும் அறிவோம். சாதாரண குடிமக்கள் கூட இதன் வேறுபாட்டை அறிவர் எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளையும் தொடரும் எனத் தெரிவித்து, வழக்கை தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com