உக்ரைனில் சிக்கிய மாணவி; பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி தந்தையிடம் ரூ41 ஆயிரம் மோசடி!
உக்ரைனில் சிக்கி இருக்கும் மகளை மீட்டுத்தருவதாகக் கூறி, மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவரிடம் மர்மநபர் ஒருவர் 41 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
போபாலை சேர்ந்த வைஷாலி என்பவரின் மகள் உக்ரைனில் சிக்கியுள்ளார். இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதாக கூறி வைஷாலியை தொடர்பு கொண்ட மர்மநபர், விமானம் மூலம் அவரது மகளை மீட்டு வருவதற்கு பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி, வைஷாலியும் 41 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியாத போதே, தான் ஏமாந்ததை அறிந்து பாதிகப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மோசடி வேலையை செய்த அந்த நபர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர் உக்ரைன் நாட்டில் கல்வி பயின்று வந்தனர் என்ற விவரம் இதுவரை தெளிவாக தெரியாமல் உள்ளது.
இந்திய அரசு உக்ரைனில் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்துள்ளன. உக்ரைனுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியர்கள் தயாகம் திரும்பி வருகின்றனர். நேற்று 219 இந்தியர்கள் மும்பை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.