லோக்பால் குழுவின் தலைவராகிறார் நீதிபதி பினாக்கி சந்திர கோஷ் ?
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாக்கி சந்திர கோஷ் லோக்பால் தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக லோக்பால் மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதா கடந்த 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பும் உருவாக வழி ஏற்பட்டது.
லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய பிரதமர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். அந்தக் குழுவில் பிரதமர், இந்திய தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், மக்களவையில் ஏதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெறுவர். இந்தக் குழுவை நியமிப்பதில் சிக்கல் இருப்பதாக பலமுறை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவந்தது. அதாவது எதிர்க்கட்சி தலைவர் இல்லை, சட்ட வல்லுநரை நியமிப்பதில் சிக்கல் என்றெல்லாம் தொடர்ந்து விளக்கங்களைக் மத்திய அரசு கொடுத்துவந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு லோக்பால் அமைப்பதற்கு 10 நாட்கள் கெடு விதித்தது.
இந்நிலையில் லோக்பால் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லோக்பால் தேர்வுக் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாக்கி சந்திர கோஷ் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நீதிபதி பினாக்கி சந்திர கோஷ் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.