‘விரைவில் மனிதர்கள் நிலவில் குடியேறி விவசாயம் செய்யலாம்’ - மயில்சாமி அண்ணாதுரை

‘விரைவில் மனிதர்கள் நிலவில் குடியேறி விவசாயம் செய்யலாம்’ - மயில்சாமி அண்ணாதுரை
‘விரைவில் மனிதர்கள் நிலவில் குடியேறி விவசாயம் செய்யலாம்’ - மயில்சாமி அண்ணாதுரை

நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் தற்காலிகமாக செயல்படும் விண்வெளி மையத்தை நிலவில் நிரந்தரமாக அமைக்க முடியும் எனவும் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

திருச்சி ஆண்டார் வீதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் (CARE ACADEMY)பயின்று, PG TRB தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பணி ஏற்க இருக்கும் 85 ஆசிரியர்கள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சந்திராயன் திட்டத்தின் முன்னாள் இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தற்போது போட்டிகள் நிறைந்த உலகமாக உள்ளது. மேற்படிப்பு என்பதை தாண்டி, வேலைக்கு செல்வதற்கு கூட போட்டித் தேர்வுகள் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே, அதற்கு தேவையான பயிற்சிகளையும், முன்னெடுப்புகளையும் செய்தால்தான், இந்திய அளவில் நம் தமிழக மாணவர்கள் முன்னேற முடியும்.

அறிவியல் ரீதியாக நிலவு எப்படி உருவானது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். நிலவு பூமியிலிருந்து பிரிந்து உருவானதா? அல்லது நிலவில் இருந்து பூமி உருவானதா? வேறு எப்படி உருவானது? என்று ஆய்வு செய்யும் போது, ஒவ்வொரு கிரகங்களிலும் என்ன தனிமங்கள் அதிகமாக உள்ளன என்று ஆய்வு செய்கிறார்கள்.

கடந்த 1972-ல் மனிதன் விண்வெளிக்கு சென்று வந்தான். அதற்குப் பின்பாக தொடர்ந்து உலக அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அதைப்பற்றி யோசிக்கிறது என்றால் அதற்கு காரணம் சந்திரயான் தான்.

நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தற்காலிகமாக செயல்படும் விண்வெளி மையத்தை நிலவில் நிரந்தரமாக அமைக்க முடியும். மனிதர்கள் அங்கேயே குடியேறி, விவசாயம் கூட செய்ய முடியும். தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் விண்வெளியில் பல மாதங்கள் தங்கி இருப்பதை பார்க்கலாம். அதுபோல, நிலவிலும் குடியேறும் காலம் விரைவில் வரும்.

நிலவில் நீர் இருப்பதை, 100 கி.மீ மீட்டர் தொலைவில் இருந்து சந்திரயான் -2 வாயிலாக பார்த்தோம். அடுத்ததாக சந்திரயான்- 3 வாயிலாக தரையில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில் நாம் தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட வேண்டும். 50 ஆண்டுக்கு முன்பாக விண்வெளிக்கு மனிதன் சென்றபோது, போட்டிக்காக சென்றான். ஆனால் தற்போது போட்டிகளுக்காக பயணிப்பதில்லை. பல்வேறு ஆய்வுகளுக்காக பயணிக்கிறான்.



மனிதக் கழிவுகள் உட்பட அனைத்து கழிவுகளையும் அகற்ற, அதற்கான தொழில் நுட்பங்கள் இருக்கின்றன. ஆனால், அதைத் தாண்டி மனிதன் அதை செய்கிறான் என்றால் அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. தொழில்நுட்பம் இருந்தும் மனிதன் அதை செய்கிறான் என்றால் அது தவறான காரியம்தான்.

நாட்டு மக்கள் எல்லாவற்றையும் இன்று உடனுக்குடன் தொலைக்காட்சி வாயிலாக தெரிந்து கொள்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் செயற்கைக்கோள். அதற்கு காரணம் அறிவியலின் வளர்ச்சி. உலகில் அதிகமான எதிரிகள் சுற்றி உள்ள நாடு இந்தியா. எனவே அவர்களை கண்காணிக்கவும் செயற்கைக்கோள்கள் தான் பயன்படுகின்றன" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com