புகைப்பட உதவி: Thequint
கபடி தமிழகத்தின் மண் சார்ந்த விளையாட்டுகளில் ஒன்று. அதை உயிர் மூச்சாக கொண்டு விளையாடி வருகின்றனர் செங்கல்பட்டு - கூவத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த சிறுமிகள்.
புகைப்பட உதவி: Thequint
“அனைவரும் 13 வயதுக்கு கீழுள்ளவர்கள். கபடி விளையாட்டில் சாதிக்க வேண்டுமென்ற கனவு கொண்டிருப்பவர்கள். கொரோனா ஊரடங்கினால் இவர்களது பெற்றோரின் வாழ்வாதாரம் முடங்கி போய்விட பள்ளி கட்டணத்தை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது இவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது காலை மற்றும் மாலை நேரங்களில் மேற்கொள்ளும் கபடி பயிற்சி தான். இருந்தாலும் போதுமான நிதி வசதி இல்லாததால் தற்போது வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் நடைபெறும் கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாட முடியவில்லை” என தங்களது நிலையை விவரிக்கிறார் சிறுமிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் சதீஷ்.
சுமார் 15க்கும் மேற்பட்ட சிறுமிகள் போதுமான நிதி வசதி இல்லாததால் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள முடியாமலும், பள்ளி கட்டணத்தை செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர். இதுதொடர்பான செய்தியை Thequint இணையதளம் வெளியிட்டிருந்தது. இந்த விவரம் அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பார்வைக்கு சென்றுள்ளது.
“கபடி விளையாட்டின் மூலம் தங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த சிறுமிகள் முயற்சித்து வருகின்றனர். தயவு கூர்ந்து அவர்களுக்கு நிதி உதவி அளித்து உதவுங்கள்” என ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் ரெய்னா.
ரெய்னாவின் ட்வீட் சிறுமிகளுக்கு உதவுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.