நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட சையது அப்துல் ரஹ்மான் கிலானி மாரடைப்பால் உயிரிழந்தார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவர் கிலானி. கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்திற்குள் காரில் வந்த 5 தீவிரவாதிகள் பாதுகாப்பு தடுப்புகளை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாதுகாப்புப் படையினர், பத்திரிகையாளர் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.
பதிலடி தாக்குதலில் தீவிரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டநிலையில் இதுதொடர்பாக அப்சல் குரு, கிலானி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2003-ஆம் ஆண்டு சாட்சியங்கள் இல்லை எனக்கூறி கிலானி, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதை 2005 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அதேசமயம் 2013ஆம் ஆண்டு அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக இன்று கிலானி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.