“மீட்புப்பணியில் 8 நாள் யார் என்பதை மறைத்த ஐஏஎஸ்” - கேரளத் தியாகம்..!

“மீட்புப்பணியில் 8 நாள் யார் என்பதை மறைத்த ஐஏஎஸ்” - கேரளத் தியாகம்..!
“மீட்புப்பணியில் 8 நாள் யார் என்பதை மறைத்த ஐஏஎஸ்” - கேரளத் தியாகம்..!

தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதையே மறைத்த 8 நாட்கள் வெள்ள மீட்புப்பணிகளில் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் 100 ஆண்டுகள் சந்திக்காத கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது. 488 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அங்கு உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர். வெள்ள பாதிப்பில் இருந்து கேரள மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த வெள்ளம் அங்கு இருந்தவர்களின் பிரபலங்கள் என்ற எண்ணம், மத உணர்வு, சாதிய உணர்வு என அனைத்தையும் தகர்த்து ஒன்றாக இணைத்தது. பலரும் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ராணுவப்படையினரும், கேரள மீனவர்களும் தக்க சமயத்தில் வெள்ளத்தை வென்று மக்களை மீட்டனர். அவர்களின் தியாகம் ஈடுசெய்ய முடியாது.

அந்த வகையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் 8 நாட்களாக நிவாரண முகாம்களில் தான் யார் என்பதையே மறைத்தும் மறந்தும் மீட்புப் பணிகளில்
ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றான தத்ரா மற்றும் நாகர் ஹாவேலியில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கண்ணன் கோபிநாத். இவர் தங்கள் பிரதேசத்தின் சார்பில் கேரளாவிற்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடியை கேரள முதலமைச்சரிடம் ஒப்படைப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி கேரளா வந்துள்ளார். இவரது வீடு கேரளாவின் புதுபள்ளியில் உள்ளது. பணத்தை ஒப்படைத்த பின்னர் அங்கு செல்லலாம் என்று நினைத்துக்கொண்டு வந்த இவர், கேரளாவின் நிலையை பார்த்துவிட்டு நேராக திருவனந்தபுரம் சென்றுள்ளார். அங்கிருந்து பல முகாம்களுக்கு சென்ற அவர் தொடர்ந்து 8 நாட்களாக தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதையே மறைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். பின்னர் 9ஆம் நாள் தனது ஐஏஎஸ் பணிகளை தொடர அங்கிருந்து சத்தமின்றி புறப்பட்டுச்சென்றுள்ளார். 

மீட்புப்பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நான் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. நான் சாதரணமாக சில பணிகளை செய்துள்ளேன். உண்மையில் வெள்ளத்தின்போது இங்கு பொறுப்பிலிருந்த அதிகாரிகளே பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களே உண்மையான ஹீரோக்கள். நான் இதை ஒரு செய்தியாக்க விரும்பவில்லை. என்னை பாராட்டுவது நியாயமும் இல்லை. களத்தில் இறங்கியவர்கள் தான் நாயகர்கள். அவர்களின் செயலாளர் விரைவில் கேரளா சோகத்தில் இருந்து மீண்டுவிடும். சில அதிகாரிகள் நான் ஐஏஎஸ் அதிகாரி என்று தெரிந்தவுடன், நாங்கள் ஏதேனும் உங்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்றனர். ஆனால் அவர்கள் பேசியதை நான் பெரிதாக எடுத்துக்கொண்டிருந்தால், மீட்புப்பணி செய்யாமல் அந்த நிமிடமே சென்றிருப்பேன்” என்றார். 

கேரளா வந்த அடுத்த நாளே மீட்புப்பணிகளுக்காக கண்ணன் விடுப்பு பெற்றுவிட்டார். ஆனால் அவர் மீட்புப்பணியில் ஈடுபடுகிறார் என்பதை அறிந்த அரசு நிர்வாகம், அவரது விடுப்பு நாட்களை வேலை செய்த நாட்களாக கணக்கெடுத்துக்கொண்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com