புதுச்சேரியின் நகரப்பகுதியில் இயங்கும் அரசு பள்ளிகளில் உணவு இடைவேளை நேரத்தை மாற்றியமைத்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
வழக்கமாக ஒருமணி நேரம் 35 நிமிடங்கள் இருந்த உணவு இடைவேளை, தற்போது ஒரு மணி நேரம் 5 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பாணைபடி காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கி பகல் 12.25-க்கு உணவு இடைவேளை விடப்படும். மீண்டும் 1.30-க்கு தொடங்கும் வகுப்புகள், வழக்கமான நேரத்தை விட அரைமணிநேரம் முன்னதாக 3.45-க்கே பள்ளி நேரம் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை காலாண்டு தேர்வு முடிந்து வகுப்புகள் தொடங்கும் அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
நீண்ட நேரம் உணவு இடைவேளை இருப்பதால் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறுவது தெரியவந்ததை அடுத்து இந்த நேரமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நேர மாற்றம் நகரப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் கிராமப்புறங்களில் செயல்படும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.