மைசூர் அரண்மனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 லட்சம் ரூபாய் தீயில் எரிந்து நாசமானது.
மைசூர் அரண்மனையை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அரண்மனையில் 4 வாயில்கள் உள்ளன. வடக்கு பகுதியில் உள்ள வரஹா கேட் எனப்படும் கோட்டை வாசல் அருகே, டிக்கெட் கவுன்ட்டர் செயல்படுகிறது. இதன் அருகிலேயே ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏடிஎம்மில் நேற்று அதிகாலை திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ, அருகில் இருந்த டிக்கெட் கவுன்ட்டருக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதிர்ச்சி அடைந்த காவலாளி, போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை போராடி அணைத்தனர். இருந்தும், டிக்கெட் கவுன்ட்டரில் இருந்த எந்திரம், ஆவணங்கள், ஏ.டி.எம். எந்திரம், ஏ.சி. ஆகியவை எரிந்து நாசமானது.
தீவிபத்து நடந்த ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று முன்தினம்தான் 5 லட்சம் ரூபாய் நிரப்பட்டது. அதில் 2 லட்சம் ரூபாயை டிக்கையாளர்கள் எடுத்திருந்ததும் தெரியவந்தது. மீதி இருந்த 3 லட்சம் ரூபாய், ஏ.டி.எம். எந்திரத்துடன் எரிந்து நாசமானதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மைசூர் அரண்மனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.