"பாஜக தலைவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய முடியாது" மத்திய அரசு
டெல்லி வன்முறை தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் அது அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப எந்தவகையிலும் உதவாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய மூன்று பாரதிய ஜனதா தலைவர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக முடிவெடுத்து, அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு இன்று மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி படேல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் தலைமையிலான அமர்வு முன் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வடகிழக்கு டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 48 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். தற்போதைய சூழலில் பாரதிய ஜனதா தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் அது அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப எந்தவகையிலும் உதவாது என கூறினார்.
அவர்கள் மீது சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எனவே இயல்பு நிலை திரும்பும் வரை நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், டெல்லி காவல்துறைக்கும் நான்கு வாரங்கள் அவகாசம் அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.