இந்து கடவுகள்களை அவமதிக்கும் விதத்தில் பொருட்களை விற்பனை செய்த அமேசான் நிறுவனத்துக்கு எதிராக நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் தற்போது உச்சத்தில் உள்ளது. யாரும் செல்ல முடியாத இடங்களிலும் சென்று பொருட்களை வழங்கி வருகிறது. மற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து ஆன்லைன் விற்பனையில் இது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
தனக்கென மிகப்பெரிய சந்தையை இந்தியாவில் அமேசான் உருவாக்கி இருந்தாலும், அவ்வப்போது அமேசான் சர்ச்சையில் சிக்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்து கடவுள்கள் சிவன், விநாயகர் படங்கள் வரையப்பட்ட டாய்லெட் பேப்பர், கால்மிதி ஆகியவற்றை அமெரிக்க இணையப்பக்கத்தில் விற்பனை செய்தது. இது இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமான #BoycottAmazon என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்நிலையில் நொய்டா போலீசார் அமேசான் நிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். விகாஷ் மிஷ்ரா என்பவர் கொடுக்கப்பட்ட புகாரின் கீழ் சட்டவிதி 153Aன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புகாரளித்த விகாஷ் மிஷ்ரா, அமெரிக்க நிறுவனமான அமேசான், இந்து மக்களின் நம்பிக்கையை கிண்டல் செய்யும் விதமாகவும், அவர்களின் மனம் புண்படும்விதமாகவும் தொடர்ந்து நடந்துகொள்கிறது. அந்த நிறுவனத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தேவை என தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டு காந்தியை அவமதிக்கும் விதத்தில் அமேசான் நிறுவனம் பொருட்களை விற்பனை செய்தது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்படும் என்ற கடுமையான எச்சரிக்கை வரை அந்த விவகாரம் சென்றதை அடுத்து சர்சைக்குரிய அனைத்து பொருட்களையும் அமேசான் நீக்கியது.