கேரள முதல்வரை இன்று சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ் !

கேரள முதல்வரை இன்று சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ் !

கேரள முதல்வரை இன்று சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ் !
Published on

மக்களவை தேர்தல் முடிவுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைய சந்திரசேகர் ராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு 4 கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று 5-வது கட்டமாக 51 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று சந்தித்து பேச உள்ளார். திருவனந்தபுரத்தில் இன்று மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அது குறித்த அரசியல் நிலவரங்களை இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் பேசிக்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

தேர்தல் தொடங்கியதற்கு பின், காங்கிரஸ் பாஜக அல்லாத முதல் தலைவரை சந்திரசேகர் ராவ் தற்போது சந்திக்க உள்ளார். தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்குமுன், மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆட்சி அமைய பல மாநில தலைவர்களை சந்திரசேகர் ராவ் சந்திக்க உள்ளார் எனத் தெரிகிறது. இதுமட்டுமின்றி மே 13-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்திரசேகர் ராவ் சந்திக்க உள்ளார். இதுதவிர கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமியும் இன்று காலை  சந்திரசேகர் ராவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். தேர்தல் முடிவுக்கு பின் மூன்றாவது அணி முழு வடிவம் பெறும் என சந்திரசேகர் ராவ் நம்புவதாகவும் தெரிகிறது.

மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னரும் கூட காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத 3-வது அணி மத்தியில் அமைய சந்திரசேகர் ராவ் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இதற்காக திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com