வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்

வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்
வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்

டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் தங்களுக்கு தொடர்பில்லை என்று விவசாயிகள் சங்கம் விளக்கமளித்துள்ளது.

மத்திய அரசு அமல்படுத்திய புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்து அதை நடத்தி வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையை 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை செங்கோட்டையை விட்டு செல்லப்போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கோட்டையில் முகப்பு பகுதியில் உள்ள சிறிய கொடிக்கம்பத்தில் விவசாய சங்கங்களின் கொடியும் ஏற்றப்பட்டது.

இந்நிலையில் டெல்லி ஐடிஓ சந்திப்புப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் போலீசாரை தாக்கமுயன்று, தடுப்புகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து, டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் தங்களுக்கு தொடர்பில்லை என்று விவசாயிகள் சங்கம் விளக்கமளித்துள்ளது. மேலும் அரசியல் பின்புலத்தில் இருந்து விவசாயிகள் பேரணியில் பங்கேற்றவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டனர் எனவும், வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் பிடித்து தருவோம் என்றும் பாரதிய கிசான் சங்கம் கூறியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com