தொடங்கியது ஃபோனி தாண்டவம்! 245.கி.மீ வேகத்தில் காற்று; மரங்கள் சாய்ந்தன!
ஃபோனி கரையை கடக்கத் தொடங்கியதை அடுத்து புயல் காற்றுக் காரணமாக ஒடிசாவில் மரங்கள், வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மின் இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஃபோனி புயல் இன்று காலை 9.30 மணிக் கரையைக் கடக்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஒடிசாவின் கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 11 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மையங்கள், 880 புயல் பாதுகாப்பு அரங்கங்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள், உடனடி உணவுகள், ரொட்டிகள், பிஸ்கட்டுகளை வானில் இருந்து விநியோகிக்க வீரர்களுடன் ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணி, மின்சாரம், பால், குடிநீர், காவல் ஆகிய துறைகளைத் தவிர்த்து ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில், பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.
இன்று காலை பூரி நகரம் வழியாக கரையைக் கடக்கும் ஃபோனி புயல், கரையோரப் பகுதி வழியாக மேற்கு வங்கத்தையும் தாக்கும் எனக் கூறப்பட்டது. அதன் தாக்கம் வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திரா மற்றும் வடதமிழகத்தில் கூட இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் ஒடிஷாவின் புரி பகுதியில், கோபால்பூர்- சந்த்பாலி இடையே கனத்த மழையுடன் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் மணிக்கு 240-ல் இருந்து 245 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசுகிறது. காற்றுடன் கூடிய மழை அங்கு பெய்து வருகிறது. இந்த ஃபோனி புயல், கஜா, வர்தாவை விட கடுமையாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
புரி பகுதியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளன. குடிசைகள் இடிந்து விழுந்தன. வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன, மின்சேவை, செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவிலும் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பல பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, மற்றும் கடற்படை வீரர்கள் மீட்பு பணிகளுக்காகவும் நிவாரண உதவிகளுக்காகவும் தயார் நிலையில் உள்ளனர். மழை அதிகரித்தால் வெள்ளம் ஏற்படலாம் என்பதால், உயிர் மட்டும் பொருட் சேதங்களை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.