ஒடிசாவில் கரையை கடக்கிறது ஃபோனி புயல்... தயார் நிலையில் கடற்படை..!
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபோனி புயல் தீவிரமடைந்து வருவதால், ஒடிஷா மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் வரும் 3-ஆம் தேதி மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் ஃபோனி புயல், நாளை மாலை ஒடிஷா கடலோர பகுதியை தாக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக மீட்புப் பணிக்காக இந்திய கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அரக்கோணம், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களுடன் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை கரை சேர்ப்பதற்காக கடற்படை கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், மருத்துவர்கள், நிவாரணப் பொருட்களுடன் அந்தக் கப்பல் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.