கேரளாவின் உலகப்புகழ் பெற்ற பூரம் விழாவில் யானை அணிவகுப்பு நடைபெறுமா?
கேரளாவின் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழாவில் யானைகள் பங்கேற்பது குறித்த அரசின் தடையால், திருவிழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழா மே 13 மற்றும் மே 14ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கேரளாவில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டினரும் பங்கேற்பர்.
திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோயிலில் நடைபெறும் இந்த திருவிழாவில் யானைகளின் அணிவகுப்பு, வண்ணக்குடைகளை மாற்றும் நிகழ்ச்சி போன்றவை மிகவும் புகழ்பெற்றவை. இந்த விழாவில் கலந்துகொள்ளும் யானைகளை 54 வயதான சீனியர் யானையான ராமச்சந்திரன் தலைமையேற்று வழிநடத்தும். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ராமச்சந்திரன் யானை 2 பேரை மிதித்துக் கொன்றுவிட்டதால், அதை பூரம் விழாவில் பங்கேற்க திருச்சூர் ஆட்சியர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த யானை வளர்ப்பவர்கள், ராமச்சந்திரன் யானை வராமல் தங்கள் யானைகளை திருவிழாவுக்கு அழைத்து வருவதில்லை என தெரிவித்தனர்.
அவர்களுடன் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, யானை ராமச்சந்திரன் 45 நிமிடம் மட்டும் பூரம் விழாவில் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் கேரள அரசின் உத்தரவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் யானை வளர்ப்போர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும், இந்த விவகாரத்தில் ஆட்சியரே முடிவெடுக்குமாறும் உத்தரவிட்டனர். இதனையடுத்து பூரம் திருவிழாவில் யானைகள் பங்கேற்குமா, ஆட்சியரின் நிலைப்பாடு என்னவாக இருக்குமென பலரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்