தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்!
தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்க இந்திய நிறுவனமும் உதவியுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது.
தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம். இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த செய்தி பரபரப்பானது. அவர்களை எப்படி மீட்பது என்று விவாதிக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகளை சேர்ந்த தலைசிறந்த நீச்சல் வீரர்கள் தாய்லாந்தில் குவிந்தனர்.
இதில் திறமை வாய்ந்த 12 வீரர்கள் மற்றும் ஒரு டாக்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலில் செல்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 8-ம் தேதி அவர்கள் குகைக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 4 சிறுவர்களும் மறுநாள் 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். மேலும் நான்கு சிறுவர்களும் பயிற்சியாளரும் நேற்று மீட்கப்பட்டனர். இதையடுத்து தாய்லாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சாகச மீட்புப்பணிக்கு இந்திய நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை செய்துள்ளது. இந்திய தூதரகம் தாய்லாந்து அரசுக்கு பரிந்துரைத்ததை அடுத்து புனேவைச் சேர்ந்த கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் நிறுவனத்தை அந்நாட்டு அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். இதையடுத்து இந்த நிறுவனம் தனது குழுவை அங்கு அனுப்பியது. சிறுவர்கள் சிக்கிய குகைக்குள் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியை செய்வது எப்படி என்றும் அதற்கான தொழில்நுட்ப பணியையும் இந்நிறுவனம் செய்துள்ளது.