இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர் என, 75 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கிய பின்னர் பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் `ரோஸ்கர் மேளா திட்டத்தின்’ 2வது கட்டமாக, இன்று குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் தவிர நாடு முழுவதும் 45 இடங்களில் 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி பயனாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “மத்திய அரசு இளைஞர்களின் திறனுக்கும் திரோஸ்கர் மேளா திட்டறமைக்கும் முன்னுரிமை அளித்து தேசத்தை கட்டியெழுப்ப முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் பலமே இந்நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்கள் தான். “கர்மயோகி பாரத்” எனும் வலைதளத்தில் பல ஆன்லைன் படிப்புகள் உள்ளது. அதனை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அது இளைஞர்களின் திறமை அதிகரிப்பதோடு எதிர்காலத்தில் தொழில்களுக்கு உதவும்” என கூறினார்.
“மேலும் ஏற்றுமதி துறையில் இந்தியா இப்போது உலகின் முக்கிய சக்தியாக உருவெடுத்து உள்ளது. தொடர்ந்து உலகின் உற்பத்தி சக்தியாக இந்தியா மாறும். ஸ்டார்ட்டப் முதல் சுயதொழில் வரையும், டிரோன்கள் முதல் விண்வெளித்துறை வரையும், இந்தியாவில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்காக திறந்து விடுவதன் மூலம் இளைஞர்கள் பெரும் பலன்களைப் பெறுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, தனியார் விண்வெளி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை இந்தியா கண்டது. இன்றைய ”ரோஸ்கர் மேளா” நிகழ்ச்சி மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலைகளை வழங்குவதற்கு தீவிரமாக செயல்படுவதைக் காட்டுகிறது” என்று பேசினார்.
தொடர்ந்து இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.