சுடுகாட்டுக் கூரை அமைத்ததில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக T.M.செல்வகணபதி இருந்தபோது, சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ. டி.ஆச்சார்யலு, எம்.சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
அதேசமயம், கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து ஐவரும்
விடுதலை செய்யப்பட்டனர். கூட்டுசதி குற்றச்சாட்டில் விடுதலை
செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதில் டி. எம் செல்வ கணபதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார். செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.