“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்

“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்
“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்

2014 நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணர் தெரிவித்துள்ளார். 

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தே பாஜக அரசு தேர்தலில் வெற்றி பெற்று வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தன. அதனால், வாக்குச் சீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான விமர்சனங்கள் என்னா ஆச்சு? என்று பாஜக எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியது. 

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியுமா? என்பது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணர் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் லண்டனில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கபில் சிபில் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில், சைபர் நிபுணரான சையது சுஜா என்பவர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேரலையில் ‘ஈவிஎம் இயந்திரத்தில் எப்படி மோசடி செய்வது’ என்பதை செய்து காட்டினார். அதோடு, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஈவிஎம் இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாகவும் அவர் அதிர்ச்சியான தகவலை அளித்துள்ளார்.

சுஜா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்:

  • * 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஈவிஎம் இயந்திரங்கள் ஹேக்கிங் மூலம் மோசடி செய்யப்பட்டது.
  • * ஹேக்கிங் குறித்து தெரிந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டார்.
  • * தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஈவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்ய உதவியது.
  • * இந்தச் செய்தியை வெளியிட ஒப்புக் கொண்ட கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார்.
  • * பாஜகவை தாண்டி சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இயந்திரங்களை ஹேக் செய்வதற்காக என்னை  அணுகின.
  • * ஈவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதால் காங்கிரஸ் 201 இடங்களில் தோற்றது.
  • * குறைந்த அலைவரிசை அதாவது 7 ஹெர்ட்ஸ் மூலம் இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவில் விளக்கம் அளிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com