பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!

பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!

பப்ஜி விளையாட்டை ஆர்வமாக விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழந்தார். 

அவ்வப்போது ஏதாவது ஒரு மொபைல் கேம் வந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும். சமீபத்தில் அப்படி எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கிறது பப்ஜி என்ற மொபைல் விளையாட்டு. பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டை விரும்பி விளையாடி வருகின்றனர்.

இந்த விளையாட்டுக்கு அடிமையாகி மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் பப்ஜி விளையாட்டை ஆர்வமாக விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழந்தார். 

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சவுராப் யாதவ். இவர் தனது நண்பர் சந்தோஷ் சர்மாவுடன் குவாலியரில் இருந்து ஆக்ராவுக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். சவுராபின் நண்பர் சந்தோஷ் சர்மா நகை தொழில் செய்பவர் என்பதால் நகைகளை சுத்தம் செய்யும் கெமிக்கலை தன் பையில் வைத்திருந்துள்ளார்.

ரயில் பயணத்தின்போது தன்னுடைய செல்போனில் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்த சவுராப்புக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. உடனடியாக பையில் இருந்த கெமிக்கலை எடுத்து குடித்துள்ளார். உடனடியாக மயக்கமடைந்த சவுராப், சரிந்து விழுந்துள்ளார். அடுத்த நிலையத்திற்கு செல்வதற்கு முன்னதாகவே சவுராப் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள சவுராப் நண்பர் சந்தோஷ் சர்மா, சவுராப் தனது செல்போனில் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தான். விளையாட்டு ஆர்வத்தில் என் பையில் இருந்த கெமிக்கலை எடுத்து குடித்துவிட்டான் என தெரிவித்துள்ளார். சவுராப்பின் உடற்கூராய்வு விவரம் வந்தவுடனே முழுமையான காரணங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com