மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழப்பது தொடர்பாக பீகார் மாநில அரசு மற்றும் மத்திய அரசு 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த காய்ச்சலால் பீகாரில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் ஏராளமான குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தைகள் உயிரிழப்பை கேட்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். என்ன காரணத்திற்காக இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தனர்? முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குழந்தைகள் உயிரிழப்பு மற்றும் மாநிலத்தில் உள்ள மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய பீகார் அரசு மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.