ஒத்திவைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு... முழு விவரம்!

ஒத்திவைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு... முழு விவரம்!
ஒத்திவைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு... முழு விவரம்!

சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்க முறைகேடாக பணம் பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், கைதிலிருந்து தப்பிக்க கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

கடந்த 2010 - 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் உற்பத்தி தொழிற்சாலை பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதே வழக்கில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்திருந்தது. அதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் கோரி மனு தொடர்ந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவானது நீதிபதி பூனம் பாண்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் அமலாக்கத்துறை தரப்பினர் முதல் தகவல் அறிக்கையில் இல்லாத விவகாரங்களை வழக்கில் மிகைப்படுத்தி கூறி வருகின்றனர். குறிப்பாக சீனர்களுக்கு விசா வழங்கியதால் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி கொடுத்தற்கு எந்த ஆதராமும் இல்லை. அப்படி இருக்கையில் எவ்வாறு அவர் ரூ.50 லட்சம் பணத்தை பெற்று இருக்க முடியும்?” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், “இவ்விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்கினால் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காமல் போக வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் சாட்சியங்களையும் கலைத்து விட வாய்ப்பு உள்ளது. அதனால் எந்த நிவாரணமும் அவருக்கு வழங்கக்கூடாது” என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துக் கொண்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com