இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் 

இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் 

இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் 
Published on

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை 2018-19 இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இந்த அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கலாகிறது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பாக இன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படுவுள்ளது. இதனையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். 

பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல்நாள் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். எனவே மத்திய பட்ஜெட்டிற்கு முன்னோட்டமாக பொருளாதார ஆய்வறிக்கை பார்க்கப்படும். அத்துடன் பொருளாதார ஆய்வறிக்கை அரசின் கொள்கைகள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசின் திட்டம் ஆகியவற்றை குறிப்பிடும். 

அதேபோல இந்த வருடம் பொருளாதார ஆய்வறிக்கையில் விவசாயம், உற்பத்தி, இறக்குமதி மற்றும் கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளுக்கு அதிக முக்கியவத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆய்வறிக்கையில் இந்தத் துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வழிகளும் வகுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

(கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் , தலைமை பொருளாதார ஆலோசகர் )

வங்களிலுள்ள வராக் கடன், வேலைவாய்ப்பு, அரசின் பொதுக்கடன் உள்ளிட்டவையின் நிலை மற்றும் அதனை சரி செய்யும் வழிகள் குறித்து ஆய்வறிக்கை வலியுறுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து இந்த ஆய்வறிக்கை தனது கணிப்பை வெளியிடும். மேலும் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் சிறு,குறு தொழில்களின் வளர்ச்சி ஆகியவை தொடர்பாகவும் அறிக்கையில் பகுதிகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com