ஆம் ஆத்மிக்கு தேசிய அந்தஸ்து.. CPI, NCP, திரிணாமுல் கட்சிகள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம், தேசிய கட்சி எனும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்file image

தேசிய கட்சிகளுக்கான வரையறை

தேசிய கட்சிகளுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, தலைமை தேர்தல் ஆணையம் சில வரையறைகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில், குறைந்தது 6 சதவீத ஓட்டுகளைப் பெற வேண்டும். மேலும், மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளில், 2 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தகுதியைப் பெற்றிருக்கும் கட்சிகளுக்கு, தேசிய கட்சிக்கான அங்கீகாரம் அளிக்கப்படும். இந்த அங்கீகாரம் கிடைத்தால், தேர்தல்களில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியும்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்file image

ஆம் ஆத்மிக்கு தேசிய அந்தஸ்து

அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சி எனும் அங்கீகாரத்தை இன்று வழங்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தற்போது டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள நிலையில், கோவாவிலும் வாக்கு வங்கியைப் பெற்றிருந்தது.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்று முடிந்த குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி 5 இடங்களில் வெற்றிபெற்றது. ஏற்கெனவே மேற்கண்ட மாநிலங்களில் (டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத்) எல்லாம் மாநிலக் கட்சியாக ஆம் ஆத்மி அங்கீகரிக்கப்பட்டு இருந்த நிலையில், தேர்தல் ஆணையம் அக்கட்சியை, தேசிய கட்சியாக இன்று அங்கீகரித்துள்ளது.

ஆம் ஆத்மி
ஆம் ஆத்மிfile image

இதையடுத்து ஆம் ஆத்மி, தேசிய கட்சி அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதால் இந்திய அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அந்தஸ்தைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிfile image

மம்தா கட்சி ரத்து ஏன்?

தேசிய கட்சிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகளை, கடந்த சில தேர்தல்களில் இந்த கட்சி பூர்த்தி செய்யவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகள் இப்போது தேசிய கட்சிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உத்தரப்பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பாரத் ராஷ்டிர சமிதி, மணிப்பூரில் பிடிஏ கட்சி, புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி, மேற்கு வங்காளத்தில் ஆர்.எஸ்.பி., மிசோரமில் எம்.பி.சி. ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்துகளையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

பாமக
பாமகfile image

அதுபோல், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் செயல்திறனின் அடிப்படையில், நாகாலாந்தில் தேசியவாத காங்கிரஸ், மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரஸ், நாகாலாந்தில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), மேகாலயாவில் மக்கள் கட்சியின் குரல் மற்றும் திரிபுராவில் திப்ரா மோதா ஆகிய கட்சிகளுக்கும் மாநில கட்சிகளின் அந்தஸ்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com