பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியல்: அனுராக் தாக்கூர் பெயரை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு

பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியல்: அனுராக் தாக்கூர் பெயரை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு
பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியல்: அனுராக் தாக்கூர் பெயரை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் காரணமாக பாஜகவின் இணை அமைச்சரும், அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான அனுராக் தாக்கூர் பெயரை பட்டியலில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை கடந்த 6ஆம் தேதியன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும். அதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 11ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனால் கட்சிகளின் பிரசாரம் டெல்லியில் அனல் பறக்கிறது. டெல்லியில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் டெல்லியின் ரித்தாலா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மணீஷ் சவுத்ரிக்கு ஆதரவாக பேரணி ஒன்றில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரான மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், துரோகிகளை சுட்டு தள்ளுங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதேபோல், ஷாஹீன் பாகில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பாஜக மக்களவை எம்.பி. பர்வேஷ் வர்மாவும் பேசினார். இதனைத்தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி, மதம், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில், வன்முறையை தூண்டும் விதமாக இவர்கள் இருவரும் பேசியதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் புகாரளித்தன. தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்கள் இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், பாஜக இணையமச்சர் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகியோரை பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து அகற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை அவர்கள் மீதான இந்த நடவடிக்கை தொடரும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com