டெல்லியில் குடிபோதையில் 18 வாகனங்களை தீயிட்டு கொளுத்தியவரை போலீசார் கைது செய்தனர்
தெற்கு டெல்லியில் உள்ள மடாங்கிர் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் குடிபோதையில் வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தியுள்ளார். அவர் தீயிட்டு கொளுத்தும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதன்படி இளைஞர் ஒருவர் கண்ணில் படும் இரு சக்கர வாகனங்களின் பெட்ரோல் குழாய்களை பிடிங்கிவிட்டு தீயிட்டு கொளுத்துகிறார். இரு சக்கர வாகனங்களில் பற்றிய தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும் பரவியது. இது குறித்து அங்கு இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை தேடிப்பிடித்து கைது செய்தனர்.
சம்பவம் குறித்து பேசிய ‘‘காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் எங்களுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போது சில வாகனங்கள் எரிந்துகொண்டிருந்தது. அதனை அணைக்க நடவடிக்கை எடுத்தோம். உடனடியாக தீயிட்டு கொளுத்திய இளைஞரை தேடிப்பிடித்தோம். அவர் மதுபோதையில் இருந்தார்” என்று தெரிவித்தனர்
மேலும் தீயிட்டு கொளுத்தியதில் 8 இருசக்கர வாகனங்களும், 2 காரும் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டதாகவும், 6 இருசக்கர வாகனங்களும் 2 காரும் லேசான அளவு சேதமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.