புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி... பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதலமைச்சர் நாராயணசாமி?
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏவும், திமுக எம்எல்ஏவும் ராஜினாமா செய்திருப்பது முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.ஏறத்தாழ பெரும்பான்மையை அரசு இழந்துவிட்ட நிலையில் சட்டப்பேரவையில் முடிவை அறிவிக்க உள்ளதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஒரு புறம் மழையும், மறுபுறம் அரசியலில் புயலும் வீசிக்கொண்டிருக்கிறது. சில மணி நேர இடைவெளியில் இரண்டு எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததுதான் இந்த பரபரப்புக்கு காரணம். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் ஏற்கெனவே ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்தார்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன், சபாநாயகர் சிவக்கொழுந்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார். அடுத்த சில நிமிடங்களில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
2 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை அடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அவசர கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா? இல்லையா? என்பது தற்போது வரை புரியாத புதிராகவே உள்ளது.
தற்போதைய சூழலில் ஆளும் காங்கிரஸ் அரசின் பலம் 12 ஆக குறைந்தது. எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரஸ் தரப்பில் நியமன உறுப்பினர்கள் உள்பட 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பின்போது முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.