மசோதாக்களுக்கு குரல் வாக்கெடுப்பு... முன்கூட்டியே முடிகிறதா நாடாளுமன்ற கூட்டத்தொடர்?

மசோதாக்களுக்கு குரல் வாக்கெடுப்பு... முன்கூட்டியே முடிகிறதா நாடாளுமன்ற கூட்டத்தொடர்?
மசோதாக்களுக்கு குரல் வாக்கெடுப்பு... முன்கூட்டியே முடிகிறதா நாடாளுமன்ற கூட்டத்தொடர்?

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் 12 வேலை நாள்கள் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கிய நிலையில், கூட்டத்தொடரை முன்னதாகவே முடித்துக் கொள்ளலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. பலமுறை சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், எந்தப் பலனும் இல்லை என்பதால், ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு முன்பாகவே முக்கிய மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி, அரசு அலுவல்களை முடித்துக் கொண்டால், பின்னர் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வருவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என மூத்த அமைச்சர்கள் கருதுகிறார்கள்.

இப்போது உள்ள சூழ்நிலையில் மசோதாக்கள் மீதோ அல்லது முக்கிய விவகாரங்கள் மீதோ விரிவான விவாதங்கள் நடைபெறும் சூழ்நிலை இல்லை என்பது அவர்களுடைய நிலைப்பாடு. இது தொடர்பான இறுதி முடிவு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனை நடத்திய பிறகு எடுக்கப்படலாம் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, அடுத்த வாரத்தில் ஓரிரு நாள்கள் அரசு அலுவல்களை முடித்துக்கொண்டு, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை முன்னதாகவே முடித்துக்கொள்ளலாம் என்பது அவர்களது கணிப்பு.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்துவார்கள் என்றும், அரசு தரப்பிலும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலேயே நடந்து வரும் ஆர்ப்பாட்டத்தை மேலும் தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அமளிக்கிடையே மாநிலங்களவையில் இரண்டு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது, மத்திய அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகளை உதாசினப்படுத்துகிறது என்பதையே காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சியுள்ள வேலை நாள்களிலும், தொடர் முழக்கங்களை எழுப்பி மக்களவை மற்றும் மாநிலங்களவையை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ‘அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்த போதிலும், புதன்கிழமையன்று நாள் முழுவதும் முழக்கங்கள் மற்றும் அவைத்தலைவர் இருக்கை முற்றுகை என்கிற நிலையில் மக்களவை முடக்கம் தொடர்ந்தது.

அதேபோலவே மாநிலங்களவையிலும் தொடர்ந்து முழக்கங்கள் எதிரொலித்தன என்பதும், 6 திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களின் இடைநீக்கம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை காலை மாநிலங்களவை கூடியதும், அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ‘ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தார். இருந்தபோதிலும், தொடர் முழக்கங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிடுவது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்ததால் 6 உறுப்பினர்களை ஒரு நாளைக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். டோலா சென், காபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா சேத்ரி, நதிமுல் ஹக், மாசும் நூர், அர்பிதா கோஷ் ஆகியோர் ஒரு நாளைக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சந்தனு சென் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மேலும் அதிருப்தி அடைந்து, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தங்களுடைய போராட்டத்தை தொடர துணை நிற்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் மற்றும் விவசாய சட்டங்கள் குறித்து விவாதங்கள் நடத்த வேண்டும் என்கிற தங்களுடைய
கோரிக்கைகளை நிராகரித்து, அரசு வலுக்கட்டாயமாக மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். மத்திய அரசு தொடர்ந்து மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி வருவதால், இப்போது சமாதானத்துக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என கருதப்படுகிறது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com