திருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..!
தனக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தள்ளிவைத்துவிட்டு தற்போது நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு மருத்துவர் ஒருவர் அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சையளித்து வருகிறார்.
கேரளாவை கடுமையாக புரட்டிப் போட்டுள்ளது இயற்கை பேரிடர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 361 பேர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் தங்களது வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடும் சேதத்தை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல தரப்பில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டு வருகின்றன.
இந்நிலையில் தனக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தள்ளிவைத்துவிட்டு தற்போது நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு மருத்துவர் ஒருவர் அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சையளித்து வருகிறார். கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் அருண் சி தாஸ். மருத்துவரான இவருக்கு ஆகஸ்ட் 19-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. எனவே தனது திருமணத்திற்கு அனைவரும் வர வேண்டும் என முகநூலில் ‘சேவ் த டேட்’என அழைப்பு விடுத்திருந்தார் அருண். ஆனால் கேரள வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுவதை அறிந்த அருண், தனது திருமணத்தை தள்ளிவைத்து விட்டு உடனடியாக நிவாரண முகாமிற்கு புறப்பட்டுச் சென்றார்.
தற்போது சங்கனாச்சேரி நிவாரண முகாமில் நூற்றுக்கும் அதிகமானோருக்கு ஒரு நாளில் சிகிச்சையளித்து வருகிறார். அருண் மற்றும் அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் வீட்டில் வெள்ளப் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தனது மருத்துவ சேவையை செய்து வருகிறார் அருண்.
இதுகுறித்து அருண், “எங்களது மருத்துவக் குழுவில் மொத்தம் 4 பேர். அதில் ஒரு மருத்துவர் தனது மகளின் அட்மிஷனுக்காக சென்றுவிட்டு திரும்பும்போது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். நானும் எனது திருமணத்திற்காக சென்றால் மொத்தம் 2 பேர் தான் இருப்பார்கள். அவர்களால் இரவு, பகலாக எப்படி பார்க்க முடியும். அதனால்தான் எனது திருமணத்தை தள்ளிவைத்துவிட்டு தற்போது நிவாரண முகாம்களில் மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருகிறேன்” என்றார்.