உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் குடிபோதையில் நேயாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை தருவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் மருத்துவர் அறைக்கு சென்று முற்றுகையிட முயன்றனர். அப்போது அறைக்குள் மருத்துவர் மது அருந்திக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நோயாளிகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுயநினைவே இல்லாமல் உளறிக்கொண்டிருந்த அவர், நோயாளிகளிடம் வாக்குவாத்திலும் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை அங்கு இருந்த நேயாளிகளும், செய்தியாளர்களும் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் நேயாளிகளை கவனிக்கும் மருத்துவரே இந்த நிலையில் இருப்பதால்தான் இந்த மருத்துவமனையில் தொடர்ந்து பல உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.