
மத்திய பிரதேச தலைநகரமான போபால் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இரண்டு பெண்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் தாயையும், சேயையும் நலமோடு காத்துள்ளனர் மருத்துவர்கள்.
இரண்டு பெண்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே அறுவை சிகிச்சை வார்டில் மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்துள்ளனர். அதில் ஒரு பெண் ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு பெண், பெண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். இரு பெண்களின் வீட்டாரும் வார்டுக்கு வெளியே காத்திருந்துள்ளனர்.
அப்போது அந்த வார்டில் பணியாற்றிக் கொண்டிருந்த செவிலியர், தவறுதலாக இரண்டாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் வீட்டாரிடம் ஆண் குழந்தையை கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் தான் செய்த தவறை உணர்ந்த அந்த பெண் சம்பந்தப்பட்டவர்களிடம் விவரத்தை சொல்லி குழந்தையை வாங்க சென்றுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் சம்மதிக்காததால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தலையிட்ட மருத்துவ கமிட்டி பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு DNA பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
“இரண்டு பேருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். அந்த நேரத்திற்குள் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்துவிடும்” என தெரிவித்துள்ளார் மருத்துவர் ஒருவர்.