உரிய நடைமுறையை பின்பற்றாமல் கைது.. திஷா ரவி தரப்பு குற்றச்சாட்டு  

உரிய நடைமுறையை பின்பற்றாமல் கைது.. திஷா ரவி தரப்பு குற்றச்சாட்டு  
உரிய நடைமுறையை பின்பற்றாமல் கைது.. திஷா ரவி தரப்பு குற்றச்சாட்டு  

'எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஒரு டூல்கிட்டை பகிர்வதில் என்ன தவறு இருக்கிறது? இது எப்படி ஒரு தேசத்துரோக செயலாக இருக்கும்' என்று திஷா ரவி தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே விவசாயிகள் குடியரசு தினத்தில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக டெல்லி போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ட்விட்டரில் வலம்வந்த  டூல்கிட்டை இதற்கு ஆதாரமாக தெரிவித்துள்ளனர். இந்த டூல்கிட்டை பகிர்ந்துதான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ட்விட்டரில் கருத்து பதிவு செய்தார்.

இந்த டூல்கிட்டை பெங்களூருவைச் சேர்ந்த பெண் சுற்றுச் சுழலியல் ஆர்வலர் திஷா ரவி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து திஷா ரவி மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பெங்களூருவில் திஷா ரவியை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு நேற்று கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட திஷா ரவி, போலீஸாரால் நேற்று மாலை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் போலீசார் உரிய நடைமுறையை பின்பற்றாமல் திஷா ரவியை கைது செய்துள்ளதாக திஷா ரவி தரப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். ''டெல்லி காவல்துறை அதிகாரிகள் சோலதேவனஹள்ளியில் சனிக்கிழமை மதிய வேளையில் தனது தாயாருடன் தனியாக வசித்து வந்த திஷா ரவியின் வீட்டை தட்டினர். அப்போது போலீசார் திஷா ரவியை விசாரிப்பதற்காக அழைத்துச் செல்வதாக அவரது தாயாரிடம் கூறினர். ஆனால் திஷா ரவி விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குதான் அவரை கைது செய்துள்ளனர். உள்ளூரில் வைத்து விசாரிப்பதாக தெரிவித்துவிட்டு டெல்லிக்கு அழைத்துச் சென்றது ஏன்?’’ எனக் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

"டெல்லி காவல்துறையினர் மாநிலம்விட்டு மாநிலம் வந்து உரிய நடைமுறையை பின்பற்றாமல் வேறு அழைத்துச் சென்றுள்ளனர். உள்துறை அமைச்சர், முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் இதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை ”என்று சுற்றுச்சூழல் ஆதரவு குழுவைச் சேர்ந்த லியோ சல்தான்ஹா கூறினார்.

 மற்றொரு செயற்பாட்டாளர், வழக்கறிஞர் வினய் ஸ்ரீனிவாசா கூறுகையில், ‘’மற்றொரு மாநிலத்தில் ஒருவரை தடுத்து வைக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிராந்திய மொழியில் எஃப்.ஐ.ஆரின் நகலை வழங்குவது உட்பட பல நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன. ஆனால் அதைவிட அடிப்படையான கேள்வி ஒன்று எஞ்சியுள்ளது. ஒரு எதிர்ப்புக்கான டூல்கிட்டை பகிர்வதில் என்ன தவறு இருக்கிறது? இது எப்படி ஒரு தேசத்துரோக செயலாக இருக்கும்? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

திஷாவின் தாயார் தனது மகளின் கைது குறித்து ஊடகங்களுடன் பேச மறுத்துவிட்டதாக 'தி இந்து' தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com