சசிகலாவுக்கு மட்டும் 5 அறைகள் தருவது சரியா? ரூபா ஸ்பெஷல் பேட்டி!
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாகக் கூறி, பரபரப்பை ஏற்படுத்திய டிஐஜி ரூபா, புதிய தலைமுறைக்கு தொலைபேசி மூலமாக பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். சிறையில் சசிகலா இருந்த அறை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட வசதிகள் குறித்து தாம் கண்டறிந்தவற்றையும் டிஐஜி ரூபா, புதிய தலைமுறையிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
சிறையில் ஒரு வரிசையில் உள்ள அறைகள் முழுவதும் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சுமார் 150 அடி நீளமுள்ள அந்த தாழ்வாரத்தின் முன் 5 அறைகள் இருந்தன. இதில் நடு அறையில் சசிகலாவும் இளவரசியும் இருந்தனர். தாழ்வாரத்தின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சசிகலா இருந்த நடு அறையில் கட்டில், மெத்தை, எல்இடி டிவி இருந்தது.
சிறையில் கைதிகள் - பார்வையாளர்கள் சந்திக்கும் இடத்தில் 7 சிசிடிவி கேமரா உள்ளது. பார்வையாளர்களை சசிகலா சந்திக்கும் காட்சி அதில் பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் பதிவாகி இருக்கவில்லை. ஏனென்றால் சசிகலா வேறு ஏதோ இடத்தில் பார்வையாளர்களை சந்தித்துள்ளார். இது விதிமீறல் இல்லையா? பயன்பாட்டில் இல்லாத அலுவலக அறையை சசிகலா பயன்படுத்தினார். அதில் சுழலும் நாற்காலி இருந்தது. எதிரில் சில இருக்கைகள் இருந்தன. கைதிகளால் நிரம்பி வழியும் சிறையில் ஒருவருக்கு மட்டும் 5 அறைகள் தருவது சரியா?
அந்த தாழ்வாரத்தில் இருந்த 5 அறைகளும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த அறைகளில் துணிகள், சொந்த மெத்தை உள்ளிட்டவற்றை வைத்திருந்தார். பொது சமையலறையில் சசிகலாவுக்கு என தனியாக சமைக்கப்பட்டது. மருத்துவரின் பரிந்துரைகள் ஏதும் இல்லாத நிலையில் இந்த சலுகை தருவது சரியா? சசிகலாவுக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்னையும் இல்லை. சிறையில் நடைபெறும் விதிமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தேன்.
இவ்வாறு ரூபா கூறியுள்ளார்.