MLA-க்கள் மீது கிரிமனல் வழக்குகள்... இணையும் பாஜக-ஆம் ஆத்மி? சலசலப்புக்கிடையே பதவியேற்பு!

MLA-க்கள் மீது கிரிமனல் வழக்குகள்... இணையும் பாஜக-ஆம் ஆத்மி? சலசலப்புக்கிடையே பதவியேற்பு!
MLA-க்கள் மீது கிரிமனல் வழக்குகள்... இணையும் பாஜக-ஆம் ஆத்மி? சலசலப்புக்கிடையே பதவியேற்பு!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 182 எம்எல்ஏக்களில், 40 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனு விவரங்களை ஆய்வு செய்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்குகள் உள்ள 40 எம்எல்ஏக்களில், 29 பேர் மீது கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்குகள் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் 26 பேர் எனவும், காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் 9 பேர் எனவும், இருவர் ஆம் ஆத்மி கட்சியினர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ஒருவர் மீதும், சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. முந்தைய தேர்தலில் 47 எம்எல்ஏக்கள் மீது குற்றவழக்குகள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 40ஆக குறைந்துள்ளது என்றும்  ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே குஜராத்தில் ஆம் ஆத்மியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள், பாஜக-வுடன் சேரப்போவதாக வரும் தகவல்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அப்படி நடந்தால், பாஜக – ஆம் ஆத்மி  கூட்டணியிலான ஐந்தாவது மாநிலமாக குஜராத் மாறும். அதுவும் முந்தைய 4 மாநிலங்களிலுமே, ஆம் ஆத்மி தேர்தலுக்குப்பின்னரே பாஜக-வுடன் இணைந்தது. இப்போது இந்த ஐந்தாவது மாநிலமும் அதையே செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த தகவல் குறித்து குஜராத் பாஜக-வோ, ஆம் ஆத்மியோ அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், சூசகமாக சொல்லிவருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர், வலுவாகவே இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பயானி என்பவர், “நான் பாஜக-வில் சேரவில்லை. ஆனால் சேர்வதா வேண்டாமா என எனக்கு வாக்களித்த மக்களிடம் கேப்பேன்” என்று பேசியுள்ளார். இது சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது. முன்னதாக ராஜஸ்தான், உத்தரகாண்ட், கோவா, ஹரியானா ஆகிய மாநிலங்களில்தான் ஆம் ஆத்மி கட்சி தங்களின் தேர்தல் வெற்றிக்குப்பின் பாஜக-வோடு இணைந்தது. ட்விட்டர்வாசிகள், `ஆஹா! எனவே காங்கிரஸை சேதப்படுத்த ஆம் ஆத்மிக்கு பிஜேபி நிதியுதவி அளித்ததா?’ என்று கூறி கேலி செய்து வருகின்றனர்.

இந்த சலசலப்புகளுக்கு இடையே, குஜராத்தி முதல்வராக இன்று இரண்டாவது முறையாக பதிவியேற்கிறார் பாஜக-வின் பூபேந்திர படேல். அவரது பதவியேற்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரெல்லாம் பங்குகொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com