கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.5000 கோடி சேமிப்பு : மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான்

கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.5000 கோடி சேமிப்பு : மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான்
கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.5000 கோடி சேமிப்பு : மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான்

குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததன் மூலம் ரூ.5,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சாத்தவ் கேட்ட கேள்விக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து மூலமாக பதிலளித்தார். அதில், ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் சரிந்த நிலையில், இந்தியா 16.71 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளாதாக கூறினார். அந்த கச்சா எண்ணெய் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைத்துள்ளதாகவும், அதன்மூலம் ரூ.5,000 கோடிக்கு மேல் அரசுக்கு செலவு மிச்சம் என்றும் தெரிவித்தார்.

அவர் கூறிய நிலவரப்படி, ஜனவரி மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் 64 டாலராக இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் உலகிலே பல நாடுகளிலே பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாகவும், படிப்படியாக கச்சா எண்ணெயின் விலை குறைந்து பிப்ரவரி மாதத்திலேயே ஒரு பேரல் 54 டாலராகவும், அதன்பிறகு மார்ச் மாதத்தில் ஒரு பேரல் 33 டாலராகவும் குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டணம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு மற்றும் படூர் ஆகிய இடங்களில் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் நிறுவப்பட்டிருப்பதாக அவரது பதிலில் கூறப்பட்டிருந்தது. பற்றாக்குறை காலங்களிலோ அல்லது போர் போன்ற காரணங்களால் திடீரென அதிக தேவை ஏற்படும்போது, அந்த கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெயை உபயோகித்து பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க முடியும் என தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com