ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், சென்னை தொழிலதிபர்களுக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சமீபகால நடவடிக்கையில் மிகப்பெரிய பறிமுதல் தொகையாக இது பார்க்கப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை மாற்றிக் கொள்வதற்கு ரிசர்வ் வங்கி நாளை வரை அவகாசம் வழங்கியுள்ள நிலையில், கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக விஜயவாடா கொண்டு சென்றபோது, 7 பேரும் காவல்துறையினரிடம் சிக்கினர். ஒரு கோடி ரூபாய் பணம், திருவத்தூரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் மற்றும் சென்னை புரைசவாக்கத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமானது என்று, விஜயவாடா காவல் இணை ஆணையர் தெரிவித்தார்.