பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி வெளியிட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாடே அதிர்ந்தது. உயர் மதிப்புடைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் அறிவிப்புக்கு பதிலடியாக, கறுப்புப்பண ஒழிப்பு தினமாக இந்நாளை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது.
ட்விட்டரில் தற்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஹேஷ்டேக்ஸ் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவானவர்கள் #AntiBlackMoneyDay என்று ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த பெருமைகளை பேசி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிரானவர்கள் #BJPMoneyLaundringDay என்று ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் #DemonetisationAnniversary என்ற ஹேஷ்டேக்கில் ஆதராவாகவும், எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.