உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகமே இல்லை: நீதிபதிகள் பகீர் புகார்
உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகமே இல்லை என்றும் கடந்த ஒரு சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் ஏற்புடையதாக இல்லை என்றும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் கூட்டாக இன்று பகீர் புகார் கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்களை என்றும் சந்தித்ததில்லை. முதன்முறையாக இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பகீர் புகார் கூறினர்.
அவர்கள் கூறும்போது, உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. இங்கு கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் ஏற்புடையதாக இல்லை. நீதித் துறையில் குளறுபடிகள் நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. எங்களது கவலைகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவே பத்திரிகையாளர்களை சந்தித்தோம். நீதித்துறையில் சில விஷயங்கள் முறைப்படி பின்பற்றவில்லை. இதுபற்றி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை இன்று சந்தித்து எங்கள் கவலைகளை தெரிவித்தோம். எங்களுக்கு உரிய பதிலளிக்காமல் உதாசீனப்படுத்தும் வகையில் தலைமை நீதிபதி செயல்பட்டார். அவரை பதவி நீக்கம் செய்வது பற்றி நாடு சிந்திக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.