ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடும் காலம் மாறி வீட்டிற்கே சாப்பாட்டை வரவைத்து உண்ணும் நிலை இன்று நடைமுறையில் உள்ளது. சாப்பாட்டை ஆர்டர் செய்தால் டெலிவரி செய்வது ஒரு நபராகவே இதுநாள் வரை இருந்தது. ஆனால் தற்போது அந்த வேலையை ஆளில்லா ட்ரோன் விமானங்கள் செய்கின்றன
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், நேரம் அதிகரிப்பு, டெலிவரி பாய்கள் சம்பளம் ஆகியவற்றை குறைக்க உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த காகா எனும் பிரபல ஆன்லைன் உணவு பொருள்கள் விற்பனையகம் ஒன்று பீட்சாக்களை ட்ரோன் விமானத்தில் டெலிவரி செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளனர். ட்ரோன் விமானத்தின் மூலம் டெலிவரி செய்யும் போது டெலிவரி பாய்கள் டெலிவரி செய்ய ஆகும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு நேரம் மிச்சமாகும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் மூலம் உணவு பொருள்களை டோர் டெலிவரி செய்ய அனுமதிக்குமாறு லக்னோ மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அனுமதிக்காகவும் காத்து கொண்டிருப்பதாக காகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
காகா நிறுவனத்தின் அதிகார ஃபேஸ்புக் பக்கத்தில் பீட்சா ட்ரோன் மூலம் எவ்வாறு டெலிவரி செய்யப்படுகிறது என்ற வீடியோவை அந்நிறுவனம் பதிவிட்டுள்ளது. முன்னதாக மும்பையில் ஒரு ஆன்லைன் உணவு பொருள்கள் விற்பனையகம் பீட்சாவை விமானம் மூலம் டெலிவரி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.