டெல்லி காற்று மாசு | தோல்வியில் முடிந்த செயற்கை மழை நடவடிக்கை!
டெல்லியில் செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், டெல்லியில் குளிர் காலத்தில் காற்று மாசுவின் அளவு உச்சத்தை தொடும். ஆண்டுதோறும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தவிர, காற்று மாசு பிரச்னைக்கும் டெல்லி அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் காற்று மாசைக் குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது. அவ்வகையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க, கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைக்க உத்தரப்பிரதேசம் கான்பூரில் உள்ள ஐஐடியுடன் டெல்லி அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
செயற்கை மழை என்பது குறிப்பிட்ட நேரத்துக்குள் ரசாயனத்தை மேகங்களில் தெளித்து, அதன்மூலம் மழையை தூண்டிவிடும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இவை ராக்கெட் மற்றும் விமானங்கள் மூலம் மேகத்தில் வேதிப்பொருட்கள் விதைக்கப்படும். மழை மேகங்களில் இப்படி ரசாயனங்கள் தூவும்போது, மழையின் அளவு 5 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கும். இதேபோன்று சோதனை ஓட்டங்கள் நடைபெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில், டெல்லியில் காற்று மாசைக் குறைக்க செயற்கை மழை பெய்விக்க IIT கான்பூர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. உத்தரப் பிரதேசம் கான்பூரில் இருந்து செஸ்னா ரக விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. சுமார் 6,000 அடி உயரத்தில் பறந்த இந்த விமானம், டெல்லியின் புராரி, விஹார், கரோல் பாக் உள்ளிட்ட இடங்களில் திரண்டிருந்த மேகங்கள் மீது சில்வர் அயோடைடு, சோடியம் குளோரைடு, பொட்டாசியம் அயோடைடு ஆகிய ரசாயனங்கள் தெளிக்கப்பட்டன. இருந்தாலும் மழை பொழியவில்லை. மொத்தம் மூன்று முறை இவ்வாறு மேக விதைப்பு முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டது. மூன்று முறை முயற்சித்தும் மழை இல்லாத நிலையில், அரசு அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.
டெல்லியில் செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. போதிய ஈரப்பதத்துடன் கூடிய மேகக் கூட்டங்கள் இல்லாததால் திட்டத்தை நிறுத்திவைப்பதாக டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டது. செயற்கை மழைக்குத் தேவையான ஈரப்பதம் 50 விழுக்காடு இருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் 15 முதல் 20 சதவீதம் ஈரப்பதத்துடன் கூடிய மேகக் கூட்டங்கள் மட்டுமே உள்ளதால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த IIT கான்பூர் இயக்குநர், "6,000 அடி உயரத்தில் பறந்த விமானம் மூலம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளித்து மழை பெய்விக்க முயன்ற நிலையில், மேகங்களில் போதிய ஈரப்பதம் இல்லாததால் திட்டம் தோல்வி அடைந்தது" என்று தெரிவித்தார்.

