4 நாட்கள் உண்ணாவிரதம்.... உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டெல்லி அமைச்சர்!
உண்ணாவிரதம் இருந்ததால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் அதிஷியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் தங்கள் மாநிலத்திற்கு உரிய நீரை விடுவிக்க ஹரியானா மாநில அரசை வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி கடந்த 21ஆம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். 4 நாள் உணவு உண்ணாததால் அவர் உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்ததை அடுத்து லோக் நாயக் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் திங்கள் கிழமை மாலை சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பின் அதிஷியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிஷி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவரது உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தெரிவித்தார்.