சந்தேகம்: மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கணவன்!
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் வடமேற்கு பகுதியில் கிராரி அருகே உள்ளது யாதவ் என்கிளேவ் காலனி. இங்கு வசித்து வந்தவர் அஷூ (31). இவர் மனைவி சீமா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. அஷூ, கம்யூட்டர்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு சொந்த வீடு இருக்கிறது. அது பழங்கால வீடு என்பதால், சமீபத்தில் பிரேம் நகர் பகுதியில் வேறு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினர்.
சீமா, வேறொருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக அஷூ சந்தேகம் அடைந்தார். இதன் காரணமாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சந்தேகம் வலுத்ததை அடுத்து, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இந்நிலையில் பழைய வீட்டில் இருந்து பொருட்களை எடுத்துவர வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார் அஷூ. அங்கு இருவருக்கும் மீண்டும் வாய்த் தகராறு ஆரம்பித்திருக்கிறது.
ஆத்திரமடைந்த அஷூ, சீமாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே மறைத்து வந்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி, அந்த வீட்டின் செப்டிக் டேங்கில் தலை மற்றும் கை கால்களை போட்டுள்ளார். ஒரு கேரி பேக்கில் உடலை வைத்து, பைக்கில் 2 கி.மீ எடுத்துச் சென்று அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் அதை போட்டார்.
பிறகு சீமாவின் அம்மாவுக்கு போன் செய்து, ‘உங்க மகளை கொன்னுட்டேன்’ என்று சொல்லிவிட்டு பிரேம் நகர் போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்தார். பின்னர் போலீசார், அஷூ சொன்ன இடத்தில் 8 மணி நேரம் தேடி, சீமாவின் உடலையையும் தலையையும் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.