டெல்லி | 15 வருட வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பத் தடை.. கிளம்பிய எதிர்ப்பு.. பின்வாங்கிய அரசு!
தலைநகர் டெல்லி கடுமையான காற்று மாசுபாட்டால் நாள்தோறும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் ஆட்சியமைத்திருக்கும் முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு, அதிகளவில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கத் தடைவிதிக்கும் நடைமுறையை அமல்படுத்தியது. அதாவது, ஜூலை 1 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களும் டெல்லியில் உள்ள எந்த எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்படாது என கடுமையான நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
மேலும், எரிபொருள் நிரப்பவரும் பழைய வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதலும் செய்யப்பட்டன. இந்த உத்தரவால் சுமார் 62 லட்சம் வாகனங்கள் ஒரே இரவில் மாயமாகும் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியிருந்தது. இந்தத் தடையை விதிக்க ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் எவ்வளவு பணம் வாங்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை டெல்லி அரசு கைவிட்டுள்ளது. பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு, இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக இந்த வாகனங்களுக்கு உடனடியாகத் தடைவிதிக்க முடியாது என டெல்லி அரசு காற்று தர மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
டெல்லியில் சுமார் 60.14 லட்சம் பதிவு நீக்கம் செய்யப்பட்ட 10 முதல் 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் உள்ளன. அவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன.