30வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு!

30வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு!
30வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் 30ஆவது நாளை எட்டியுள்ளது. ஏற்கனவே நடந்த பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு ஆகியவற்றுக்கு ஆபத்து உள்ளதாக கூறி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள், டெல்லியில் உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் 30-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையிலும் இதுவரை எந்த வித தீர்வுகளும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராடி வரும் 40 விவசாயிகள் சங்கத்தினருக்கும் மத்திய வேளாண் துறை இணை செயலாளர் விவேக் அகர்வால் கடிதம் எழுதினார். வேளாண் சட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து திறந்த மனதுடன் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கான தேதியையும் இடத்தையும் விவசாய அமைப்புகளே முடிவு செய்யலாம் என்றும் அக்கடிதத்தில் விவேக் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இப்பேச்சுவார்த்தையில் குறைந்த பட்ச ஆதார விலை குறித்து விவாதிக்கத் தேவையில்லை என்றும் ஏனென்றால் அது வேளாண் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட அம்சம் என்றும் விவேக் அகர்வால் குறிப்பிட்டிருந்தார். விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்கனவே அழைத்திருந்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com