தன்னுயிரை பொருட்படுத்தாமல் 11 நபர்களின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்..!
டெல்லியில் உள்ள அனாஜ் மண்டி பகுதியில் நடைபெற்ற தீ விபத்தில் தன்னுயிரை பொருட்படுத்தாது 11 நபர்களின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரரை அம்மாநில உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நேரில் சென்று பாராட்டியுள்ளார்.
டெல்லியில் அனாஜ் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பபட்டது. இந்த விபத்தில் 43 பேர் உயிரிழந்திருப்பதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தீ விபத்தில் தீயை அணைப்பதற்கு ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் ராஜேஷ் சுக்லா என்பவர் தன்னுயிரை பொருட்படுத்தாமல் 11 நபர்களின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இதில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுக்லாவை டெல்லியின் உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நேரில் சென்று பாராட்டியுள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் சுக்லா குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் ராஜேஷ் சுக்லா ஒரு உண்மையான நாயகன். விபத்தின் போது முதல் ஆளாக தொழிற்சாலைக்குள் நுழைந்து 11 நபர்களின் உயிரை காப்பாற்றியுள்ளார். கால் எலும்பில் காயம் ஏற்பபட்ட போதும் இறுதிவரை அவரது பணியை தொடர்ந்தார். துணிச்சல் மிக்க இந்த வீரரை வணங்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 லட்சம் நிதியும், காயம் அடைந்தவருக்கு 1 லட்சம் நிதியும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.