கார்த்தி சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரிட்டனிலிருந்து இன்று காலை சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கார்த்தி ஒத்துழைக்கவில்லை எனக்கூறி, அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு தற்போது சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த 2007 இல் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தின் உதவியை நாடி, அதற்கு ரூ.10 லட்சம் பணம் கொடுத்ததாக ஐஎன்எக்ஸ் மீடியா உரிமையாளர் இந்திராணி முகர்ஜி ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்க சிபிஐ தரப்பு தெரிவித்தது. அத்துடன் ப.சிதம்பரத்திற்கு எதிராக இந்திராணி சாட்சியம் அளித்துள்ளதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது இந்திராணி மற்றும் அவரது கணவரை சந்தித்து கார்த்திக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே வாதத்தின் போது ‘நான் இந்தியாவை விட்டு செல்லமாட்டேன். எனது பாஸ்போர்ட்டை சமர்பிக்கத் தயார்” என கார்த்தி தெரிவித்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், கார்த்தியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இதற்கிடையே லண்டனில் இருந்து ப.சிதம்பரம் இந்தியா விரைந்து கொண்டிருக்கிறார்.