சமீபகாலமாக தலைநகர் டெல்லியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும், தனியாக நடந்து செல்லும் குழந்தைகள், பெரியவர்களையும், துரத்தித் துரத்தி தாக்குகின்றன. இந்நிலையில் தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து அருகிலுள்ள ஒரு கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது 14 நாய்கள் கூட்டமாக சேர்ந்து அந்த சிறுவனை கடிக்கத் தொடங்கியிருக்கின்றன. தப்பியோட முயன்றபோதும் நாய்கள் ஆக்ரோஷமாக சிறுவனை கடித்துக் குதறியது. இதில் சிறுவனின் கைகள், தோள், கழுத்து மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் நாய்களை விரட்டிவிட்டு சிறுவனை மீட்டனர்.
இதையடுத்து குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனின் உடலில் 12 இடங்களில் நாய்க்கடி மற்றும் கீறலால் காயம் ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். சிகிச்சைக்கு பின் சிறுவன் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டான்.
தெற்கு டெல்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாகவும் தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடிவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இதே பகுதியில் கடந்த மாதம் மூன்று நாட்களில் இரு சிறுவர்கள் தெருநாய் தாக்குதலால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் வசிக்கும் தெருக்களில் நாய்த்தொல்லை இருக்கிறதா... கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்..!