மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
உடல் நலக்குறைவால் அருண் ஜெட்லி கடந்த சனிக்கிழமை காலமானார். அவரது மறைவின் போது பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மோடி, அருண் ஜெட்லியின் இல்லத்துக்குச் சென்றார். அங்கே அருண் ஜெட்லியின் மனைவி, மகன், மகள் ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடனிருந்தார்.
முன்னதாக பிரதமர் மோடி வெளிநாட்டிலிருந்தபடியும், அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். அப்போது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்ப வேண்டாம் என பிரதமர் மோடியிடம் அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. அதற்கேற்ப பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாமல், முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.