நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார். அதில், ''பிபின் ராவத் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைக் கல்லூரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ அதிகாரிகளுடன் உரையாட குன்னூருக்கு பயணம் சென்றார். நேற்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிபின் ராவத் சூலூர் கிளம்பினார். அந்த விமானம் 11:35 மணியளவில் சூலூர் விமானப்படைத் தளத்தில் இறங்கியது.